அப்பாவாகப் போகும் ஆண்கள் செய்ய வேண்டியவைகள் !

Fakrudeen Ali Ahamed
தாயாகும் பூரிப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் பேரின்ப நிகழ்வு. கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமிப் பந்தில் தவழ விடும் நாள் வரை அவர்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை.
பிரசவத்தோடு பெண்ணின் கஷ்டங்கள் தீர்ந்து விடுகின்றனவா என்ன? அந்தக் குழந்தையைப் பராமரித்துப் பாதுகாக்கும் அத்தனை வேலைகளும் தாய்க்குத் தானா? 

அப்போ... அப்பாக்களுக்கு? மனைவி கருவுற்ற போதும், பிரசவித்த போதும் சக நண்பர்களுக்கு 'பார்ட்டி’ கொடுப்பதோடு சரியா?

'குழந்தையைப் பெற்றெடுப்பது முதல் பேணிக்காப்பது வரை தாய்க்கு நிகரான பணியைத் தந்தையும் செய்ய வேண்டும்.
 
மனைவியுடன் கூடவே இருந்து குழந்தையைக் கவனிக்க வேண்டிய பெரும் பொறுப்பு கணவனுக்கு உண்டு எனச்சொல்லும் முதன்மைக் குடியுரிமை (மகப்பேறு) மருத்துவர் சித்ரா செல்வமணி,

மனைவியின் கர்ப்ப காலத்தில் கணவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், தந்தையாகப் போகும் தன்னிகரில்லா உறவை, வரவேற்க எப்படிக் காத்திருக்க வேண்டும் என்பதையும் விளக்கினார்.

இந்த விஷயத்தில் திருமணம் ஆனதில் இருந்தே ஆண்களின் பங்கும் தொடங்கி விடுகிறது. முதலில் இப்போது நமக்குக் குழந்தை அவசியம் தானா என்பதைத் தம்பதிகள் இருவரும் கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும். 
இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்பது உங்கள் முடிவு என்ற£ல், தகுந்த கருத்தடை சாதனங் களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கருவுற்ற பிறகு தொடர்ந்து செக் -அப்கள் செய்வது அவசியம். 

இதை தேவையற்ற செலவு என ஒருபோதும் நினைக்காமல், ஒத்துழைப்பு தர வேண்டியது முக்கியம். டாக்டர் சொல்லும் நேரத்தை ஒரு போதும் தவிர்க்காமல், அழைத்துச் செல்லுங்கள். 

அதை விட முக்கியமானது, ஒவ்வொரு முறையும் செக்-அப்பிற்கு நீங்களே உடன் இருந்து அழைத்துச் செல்ல வேண்டும். ஆபீஸ் வேலையைக் காரணம் காட்டி தப்பிக்காதீர்கள்.

திருமணம் ஆன புதிதில் பெண்ணுக்குப் புகுந்த வீட்டில், பிறந்த வீடு அளவுக்கு அந்நியோன்யம் இருக்காது.
 
அதனால் கணவனாகிய நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் அந்தப் பெண்ணுக்கு, இதுவும் நம் வீடு தான் என்ற எண்ணத்தை மனதில் ஆழ பதிக்க வேண்டும்.

அந்த அளவுக்கு மனைவிக்கான உரிமைகளையும், பொறுப்பு களையும் வழங்குவது முக்கியம். 
 
ஏனெனில் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அடிக்கடி ஏதாவது சாப்பிடத் தோன்றும் அல்லது பிடித்த தின்பண்டங்களை உண்ணத் தோன்றும்.

விரும்பிக் கேட்கும் பதார்த்தங்களை வாங்கிக் கொடுப்பது சரிதான். அவை தரமானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை எண்ணெய்ப் பதார்த்தங்களை தவிர்த்திடுங்கள்.
அடிக்கடி மனைவியை வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்று அவருடன் மனம் விட்டுச் சிரித்துப் பேசி, கொஞ்சி விளையாடுங்கள். 

இது கர்ப்பக் காலத்தில் அவருக்கு இருக்கும் தேவையற்ற பயத்தைப் போக்க உதவும். கர்ப்பம் ஆன முதல் மூன்று மாதங்களில் ஒரு பெண்ணுக்கு எடைக் குறைவு இருப்பது இயல்பு தான். 

அதைப் புரிந்து கொள்ளுங்கள். இது குறித்து தேவை இல்லாமல் பயம் வேண்டாம். கர்ப்பக் காலத்தில் சில பெண்களுக்குச் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்னைகள் இருக்கலாம். 
 
உங்கள் துணைக்கு, இந்தப் பிரச்னைகள் இருக்கிறதா என்பதைத் தயக்கம் கொள்ளாமல் கேட்டுத் தெரிந்து, பிரச்னை இருப்பின் அதற்குரிய தீர்வுகள் கிடைக்க வழிவகை செய்யுங்கள். 
 
எந்த விஷயத்திலும் இருவருக்குள்ளும் ஒளிவு மறைவு வேண்டாம். கர்ப்பக் காலத்தில் சரியான உணவுகள் எடுத்துக் கொள்வது அவசியம். மனைவி சரியாகச் சாப்பிடுகிறாரா என்பதைக் கவனியுங்கள். 
 
நேரம் கிடைக்கும் போது, நீங்களே ஊட்டி விடுங்கள். அப்போது உங்கள் மனைவி, நிச்சயம் குறைந்தது ஒரு கைப்பிடியாவது அதிகம் சாப்பிடுவார்.

வெவ்வேறு மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றிருந் தாலும், ஒரே இடத்தில் ஆலோசனை பெற்று வந்தாலும், அனைத்து டாக்கு மென்ட்களையும் தேதிவாரியாக வைத்துக் கொள்ளுங்கள். 

இது சரியான சிகிச்சைக்குப் பேருதவியாக இருக்கும். மூட நம்பிக்கைகளை ஆதரிக்காதீர்கள். உதாரணமாக 'சித்திரை மாதம் குழந்தை பிறந்தால், மாமனுக்கு ஆகாது’ என்பன போன்ற மூட நம்பிக்கை களைக் காரணம் காட்டி,

சித்திரை மாதம் பிறக்க வேண்டிய குழந்தையை முன் கூட்டியே அறுவை சிகிச்சை செய்து பங்குனி மாதமே வெளியில் எடுப்பார்கள். 
இது முற்றிலும் தவறானது. இது முதலில் இரண்டு உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை மறவாதீர்கள். பிரசவ நேரத்தில் கணவன் அருகில் இருந்தாலே, பெண்ணுக்குத் தனி தைரியம் பிறக்கும். 

அதே சமயம் இதில் அனுபவம் மிக்க பெண் ஒருவரையும் அருகில் இருத்திக் கொள்வதும் மிகவும் நல்லது. குழந்தை பிறந்த பிறகு சில பெண்கள், தாய்ப்பால் கொடுக்கக் கூச்சப் படுவார்கள். 

இந்த நேரத்தில் அருகில் இருந்து, தாய்ப்பாலின் மகத்துவத்தைச் சொல்லி மனைவிக்குப் புரிய வைப்பதும், தேவையற்ற கூச்சத்தைப் போக்குவதும் உங்கள் கடமை.

சில குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்ரீதியாகச் சின்ன சின்னப் பிரச்னைகள் இருந்து கொண்டே இருக்கும். 

அந்த நேரங்களில் கணவன், குழந்தையையும் மனைவியையும் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வதில் ஆரம்பித்து,

மருந்து, மாத்திரைகள் சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது வரை எல்லாவற்றிலும் பொறுப்பாகச் செயல்படுங்கள்.
ஒரு குழந்தைக்கும் மறு குழந்தைக்கும் போதுமான இடைவெளி இருக்க வேண்டும். வயிற்றில் அடுத்த குழந்தையைச் சுமக்கும் போது, பிறந்த பச்சிளம் குழந்தைப் போதிய கவனிப்பு இல்லாமல் சவலைப் பிள்ளையாகி விடக்கூடாது.
 
உளவியல் ரீதியில் பல பயனுள்ள விஷயங்களை அலசுகிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ராஜ்மோகன் 
 
திருமணம் ஆனவுடனேயே குழந்தை பெற்றுக் கொண்டாக வேண்டும் என்று இல்லை. 
 
உங்களின் விருப்பத்தையும், கடமைகளையும், பொருளா தாரத்தையும் கணக்கில் கொண்டு, இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் குழந்தைப் பெறுவதைப் பற்றி முடிவெடுங்கள். 
இல்லை யெனில் குழந்தை பிறந்த பிறகு இப்ப நான் குழந்தை கேட்டேனா? என்ற வாக்குவாதம் ஏற்படலாம். கர்ப்பமான பிறகு, நல்ல படியாகக் குழந்தை பெற்றுக் கொள்வது மனைவியின் வேலை. 
 
நமக்கு இதில் என்ன இருக்கிறது? என்று இருக்காதீர்கள். குழந்தையை பெற்றெடுப்பதில் இருவருக்குமே சமஅளவில் பொறுப்பு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

கர்ப்ப காலத்தில் மனைவிக்கு வாந்தி எடுப்பது, பசியின்மை போன்ற உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்படும் போது, கணவன் கூடுமானவரை அருகிலேயே இருந்து, அனுசரனையாகப் பேசினால், இந்தப் பிரச்னைகள் அவர்களை மனதளவில் பாதிக்காது.

மனைவியுடன் வாக்கிங் போவது, உணவு ஊட்டி விடுவது, சிரிக்கச் சிரிக்கப் பேசுவது,நெறிக் கதைகளைச் சொல்வது இதெல்லாம் மற்ற நேரத்தை விட இந்த நேரத்தில் மிகவும் அவர்களைக் கவரும். 

இதன் மூலம் உங்கள் மீதான காதலும் பெருகும். சில பெண்கள் பிரசவக் காலத்தில் பிறந்த வீட்டிற்குச் செல்வார்கள். 
 
சில பெற்றோர்கள் தங்கள் மகளை விரும்பி அழைத்துச் செல்வதில் தவறே இல்லை. சிலர் வற்புறுத்தி அனுப்பி வைப்பதும் உண்டு.

இது தவறு. தன் பெற்றோர்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடி, அந்த பெண்ணுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். இதைத் தவிர்ப்பது கணவனின் கையில்தான் இருக்கிறது.

குழந்தை பிறந்த சில மாதங்கள் வரை, மனைவி கணவனுடன் செலவிடும் நேரம் குறைவது இயல்பு. குறிப்பாக உடலுறவில் சிறிய இடைவெளி ஏற்படலாம். 
இதைக் கணவன் சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மனைவியை வற்புறுத்தவோ, சண்டை போடவோ செய்யாதீர்கள்.
 
பொதுவாக வீட்டு வேலைகளை இருவருமே பகிர்ந்து கொள்வது நல்லது. குறைந்த பட்சம் குழந்தை பிறக்கும் கால கட்டத்திலாவது வீட்டு வேலைகளைக் கணவரே செய்யுங்கள்.

தவறில்லை.'இது என் குழந்தையும் இல்லை, உன் குழந்தையும் இல்லை; நம் குழந்தை’ என்ற நினைப்பதை இருவருமே உணர்ந்திருக்க வேண்டும். அப்போது தான் குழந்தையின் மனநிலையும் ஆரோக்கியமாக இருக்கும். 
Tags: