அருமருந்தாகும் தாயின் தாய்ப்பால் !

Fakrudeen Ali Ahamed
தாய்மை இந்த தேசத்தின் ஆகச் சிறந்த அழகு. சிலருக்கு வாய்க்கிறது. பலருக்கு வாய்க்காமல் போகிறது. அந்த ஒரு சிலரும், நடைமுறை விசயங்களை தொலைகிறபோது தான், 
நினைவூட்டு நாட்கள் அவசியமா கிறது. உலகத் தாய்ப்பால் வாரம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் ஒன்று முதல் ஏழு தினங்கள் கொண்டாடப் படுகிறது.

யுனெஸ்கோவும், உலக சுகாதார நிறுவனமும் பிரபஞ்சத்தின் மத்தியில் நின்று கொண்டு தாய்ப்பால்… தாய்ப்பால் எனத் தலையில் அடித்துக் கதறுகிறது.

மருத்துவமனைகள், ஆட்சியர் அலுவலகங்கள், சமுதாயக் கூடங்கள், கல்லூரிகள், பள்ளிகள் எனக் களமிறங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தச் சொல்கிறது.

AAP எனச் சொல்லப்படும் THE AMERICAN ACADEMY OF PAEDIATRICS உம் தாய்ப்பால் புகட்டுதலை மிகத் தீர்க்கமாக வலியுறுத்துகிறது.

நாம் என்ன செய்கிறோம், இதெற்கெல்லாமா நோட்டீஸ் கொடுப்பீர்கள் சே… எனச் சலித்துக் கொண்டு துண்டுச் சீட்டுகளைச் சுருட்டி தெருவோரம் வீசி விட்டுப் போகிறோம். ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் புரியும்.

ஒரு தாயிடம், அவள் குழந்தைக்கு, அவள் பாலை புகட்ட, அவளிடமே கெஞ்சிக் கொண்டிருப்பது எத்தனை அபத்தம் என்பது. இது உலகளாவிய உணர்வுப் பிரச்னை.

பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் என்பதற்குள் அடக்கிப் பார்க்கிற விசயமாகத் தெரியவில்லை. எந்தச் சூழலுக்குள்ளும் சிக்காத தாய்க்கும் சேய்க்குமான பேரன்பாகத் தான் .

இதைப் பார்க்க வேண்டி யிருக்கிறது. ஒரு குழந்தை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கு மான ஒப்பந்தம் என்று எப்படிச் சுலபமாகக் கடந்து போய்விட முடியும். இந்தச் சமூகத்தின் துளிர்.
தேசத்தின் அடையாளம் அல்லவா. அப்படியானால் அதை எப்படி ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க வேண்டும். தாயிலிருந்துதான் துவங்க வேண்டும் இந்த பங்களிப்பு.

2015-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் ஐந்து தாய்மார்களில் நான்கு பேர் தாய்ப்பால் கொடுப்பதில்லை என்ற பேரதிர்ச்சியை யுனெஸ்கோ முன்வைக்கிறது.

கல்வியில் மிகவும் பின் தங்கிய சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் கூட ஐம்பது சதவீதம் பேர் தாய்ப்பால் புகட்டுகின்றனர்.

ஆனால், தமிழகத்தில் 18.8% குறிப்பாகச் சென்னையில் 7% தாய்மார்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதாகப் புள்ளிவிவரங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

தாய்ப்பால்

தாய்மை வரம் என்றால் தாய்ப்பால் வரப்பிரசாதம். கருத்தரித்த நாள் முதல் அந்த சிசுவிற்காகவே தாயின் உடலும் மனமும் பழக்கப்படுகிறது. இயற்கையான பிரசவம் என்றால் அரை மணி நேரத்திற்குள்ளும்,

அறுவை சிகிச்சை என்றால் ஒன்றரை மணி நேரத்திற்குள்ளும் தாய்ப்பால் புகட்ட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

குழந்தை பிறந்தவுடன் அதன் ஸ்பரிசத்தைத் தேடும் தாயும், அவளின் பால் வீச்சத்திற்கு, கதகதப்பிற்கு ஏங்கும் குழந்தையின் துடிப்பையும் எந்த மெசின்களாலும் கண்டறிய முடியாது.

அன்பையும் நேசத்தையும், ஆரோக்கியத்தையும் குழைத்து மார்பில் அணைத்தபடி தன் குழந்தைக்கு கலப்படமற்ற பால் புகட்டும் ஒரு தாயின் மன அமைதி வேறெதில் கிடைக்கப் போகிறது.

அம்மாவிற்கும் குழந்தைக்குமான உளவியல் ரீதியானத் தீண்டல், அரவணைப்பு, பாதுகாப்பு போன்ற அனுசரனைகளை எப்படி செயற்கைப் பாலில் எதிர்பார்க்க முடியும்.

ஊர் கூடித் தேர் இழுக்குறீர்களே? அப்படி என்னதான் இருக்கிறது தாய்ப்பாலில் என்ற கேள்வியை முன் வைத்தால் இவைகள்தான் பதில்.

குழந்தை பிறந்து முதல் இரண்டு நாட்கள் சுரக்கும் ‘கொலாஸ்ட்ரம்’ எனும் சீம்பாலில் தான் குழந்தைக்கு நோயை அண்டவிடாத ஆண்டிபாடிஸ் தடுப்பு மருந்து இருக்கிறது. 
குழந்தைக்கு ஆறு மாதங்கள் கண்டிப்பாகத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
அதற்குப் பிறகு ஒரு வருடமாவது தாய்ப்பாலுடன் சேர்ந்த இணை உணவு அவசியம்.

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் நரம்பு மண்டலத்திற்கும் வலு சேர்க்கக் கூடிய,

எளிதில் செரிக்கும் புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்பு, மாவுச்சத்து இவைகளோடு வைட்டமின்களும் தாய்ப்பாலில் அதிகம் நிறைந்துள்ளன.

குழந்தைக்கு வரும் ஊட்டச் சத்துக் குறைபாடுகளில் இருந்து இவை காப்பதோடு டையாபடிஸ்

மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களை அண்டவிடாமல் தடுக்கும் எனவும் மருத்துவம் கூறுகின்றது.

அத்துடன் தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டம் கர்ப்பத் தடைக்கான நாட்களாகவும் கருதப் படுகிறது.

பிட்யூட்டரியில் சுரக்கும் ஆக்ஸிடோஸின், கருப்பையை சுருங்கச் செய்து பிரசவக் காலத்து உதிரப் போக்கி லிருந்து தாயைக் காக்கிறது.

தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு மார்பகப் புற்று மற்றும் சினைப்பை புற்றுநோய் வரும் தன்மையும் தடுக்கப்படும் என்கிறது இந்திய மருத்துவக் கழக ஆராய்ச்சி.

எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் தாய்க்கும் மகனுக்கும், தாய்க்கும் மகளுக்குமான அன்பைத் தகர்க்க முடியுமா?

பிரசவத்தின் போது குழந்தை இறந்து, பால் கொடுக்க முடியாமல் அவதிப்படும் ஒரு கிராமத்து தாயின் மார்பகத்தில் இருந்து,

ஒருவார காலம் தன்னியல்பாக வழிந்தோடும் நெகிழ்ச்சியை, மல்லிகைப் பூக்கள் கொண்டு கட்டுப் படுத்தும் அவளின் உயிர் வலியை நகரத்தின் எந்த அழகுநிலையம், மஸ்காரா போட்டு மறைக்கும்.

என் குழந்தை என் ரத்தம், என் உணர்வு என்கிற நிலையில் தன்னுள் சுரக்கும் உணவை தன் ஜீவனுக்கு ஊட்டி உயிர்த்தெழச் செய்பவள் தானே தாய்.

குழந்தை பிறந்தபிறகு கொடுக்கும் மருந்துக் குழம்பும் பத்தியச் சாப்பாடும் நான் தாயாகி விட்டேன் என்கிற உன்னதத்தை அவளுக்குள் கிளர்த்திவிடுமே.

பாலில் வேகவைத்த பூண்டு, திருக்கை மீன் குழம்பு, சுறாப்புட்டு, வெண்டைக்காய் வதக்கல் எனப் பால் சுரக்கும் டிப்ஸ்களும், மாம்பழம் மாந்தம், பலாப்பழமா கூடவே கூடாது

குழந்தைக்கு ஆகாது எனக் கடிந்து கொள்ளும் பாட்டிகளு க்கும், இன்றைய இளம் தாய்கள் சொல்கிற பதில், நாங்கள் வேலைக்குச் செல்கிறோம். இதெல்லாம் சரிப்பட்டு வராது என்பதுதான்.

அரசு வேலைக்குச் செல்பவர்களுக்கு அரசாங்கம், அதிகப் படியான பேறுகால விடுமுறைச் சலுகைகள் வழங்குகிறது.

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களும் காரணம் சொல்கிறார்கள்.

எங்களுக்கு ஓரிரு மாதங்கள் தான் விடுமுறை. பிரெஸ்ட் பீடிங்கா… நோ சான்ஸ் என்கிறார்கள்.

மனம் புறக்கணிக்கிற போது அறிவியல் அவசரமாக ஆட்கொள்கிறது. அம்மாக்களே அப்படி யெல்லாம் சொல்லாதீர்கள் என்ற பதட்டத்தில்,

பிரெஸ்ட் பம்ப்புகள் மூலம் தாய்ப்பாலை எடுத்து குளிர்சாதனப் பெட்டிகளில் பதப்படுத்தி குழந்தைகளுக்கு கொடுக்கலாம் எனக் கண்டுபிடித்து விட்டார்கள்.

அறை வெப்ப நிலையில் 8 மணி நேரமும் பிரீசரில் 24 மணிநேரமும் வைக்கலாம்.
மேலும் 20’c-இல் மூன்று மாதங்கள் வரை கூடப் பதப்படுத்தி அதன் தன்மை மாறாமல் குழந்தைக்கு கொடுக்கலாம் என்கிறார்கள்.

ரத்த வங்கி போல தாய்ப்பால் வங்கியும் மெல்ல நடைமுறை க்கு வருகிறது.

இத்தனை இணக்கமான சூழல் இருந்தும், நஞ்சேறிய பவுடர்களை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி தரிசான வாரிசுகளை உருவாக்கி வருகிறோமே ஏன்?

வெளியில் சொல்ல முடியாத அந்த நெருடலில்தான் குழந்தைகளின் இறப்பு விகிதம் கூடிக்கொண்டே போகிறது.

தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்து விடும் என இன்றைய இளம் பெண்கள் கங்கணம் கட்டிவிட்டார்கள்.

எத்தனை வேதனை இது. இந்த அறியாமையை எப்படி போக்குவது என்பதில் மருத்துவம் உறைந்து நிற்கிறது.

போர்க்களத்தில் போரிட்டு வீர மரணம் எதிர்கொள்ளும் தருவாயில், வீரர்களின் உயிர் பிழைக்க தங்கள் மார்பகக் காம்புகளைப் பிழிந்து பால் ஊட்டிய சங்க இலக்கியத் தாய்களின் ஈரப்பதம் எங்கே போயிற்று.

தாய்ப்பால் என்பது தாயிடமிருந்து குழந்தைக்கு கடத்தப்படும் கொழ கொழப்பான ஏதோ ஒரு திரவம் அல்ல.

அது தாயின் அன்பு, அவளின் பாசம், ஊறிக் கிடக்கும் அவளது அறிவு, மடைமாற்றம் செய்யப்படும் மூதாதையரின் குணம்.

இப்படி அணு அணுவாய் அனுபவித்து குழந்தைக்குத் தாயாகி மகிழும் நிலையான அழகைவிட, நிறப்பூச்சுகளில் மயங்கி,

சுருக்கம் விழக் காத்திருக்கும் நீர் வற்றிய வெற்றுத் தோல் எப்படி அழகாகும். அழகின் அறியாமையை பெண்கள் அறிந்து கொண்டால் தான் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.

எத்தனை புள்ளி விவரங்களைக் கோடிட்டாலும், தாய்மை அளப்பறியது. தன்னிலை உணர்தல் அழகு. இளம்பெண்கள் அதை முதலில் தீர்மானிக்க வேண்டும். 
ஆதிக் கிழவிகள் விட்டுச் சென்ற தாயன்பின் எச்சத்திலேனும், குழந்தை பிறந்ததும் மருத்துவமனைக்கு உங்களைப் பார்க்க வரும் நண்பர்களின் உறவினர்களின் கைகளில் இருக்கும்.

செயற்கை பால் டப்பாக்களையும், பால் புட்டிகளையும் மறுத்துவிடுங்கள். உங்கள் குழந்தைக்கு நீங்கள் உணர்வுப் பால் புகட்டும் அன்னியோன்யத்தை தோழிகள் நெக்குருகப் பார்க்க வேண்டும்.

அவர்கள் மகள்களை மகன்களை ஓடிச்சென்று மார்போடு அணைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தாயின் மார்பில் சுரக்கும் வாஞ்சையால் மட்டுமே தாய்பால் புகட்டும் உள்ளொளி ஒளிரும்.

என் குழந்தையின் எதிர்காலத்திற்காகத்தான் உழைக்கிறேன் என இரவும் பகலுமாய் பட்டினிப்போட்டு விட்டு ஆளாய் பறக்குறீர்களே.

உங்கள் மார்பில் ஊறும் ஒரு சொட்டுப் பாலையேனும் அந்தக் குழந்தையின் நாவில் ஊற்றி நனைத்து விட்டுப் போங்கள்.

உங்களை மட்டுமே நம்பிக் கண் விழித்த பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுங்கள். வீட்டிற்கு மட்டுமல்ல இது நாட்டிற்குச் செய்யும் சேவையும் கூட.
Tags: